தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னை : மழைக்கு வாய்ப்பு ... மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து கொண்டு வருகிறது.

இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும். சென்னையில் இருந்து தற்போது 30 கி.மீட்டர் தெற்கு-தென் கிழக்கே மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது.

புயலின் பின்பகுதி இன்னும் 1 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் புயல் கரையை கடந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.