சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள், கரைக்கும் இடங்கள் குறித்து சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியீடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நேற்று தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள், கரைக்கும் இடங்கள் குறித்து சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதை அடுத்து அந்த அறிவிப்பில் சென்னை காவல் எல்லைக்குள் 1,352 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் காவல் சரகத்தில் 699 சிலைகளும் வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், பல்கலைநகர், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.

மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில், வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. விநாயகர் சிலை ஊர்வலம், கரைக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.