பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் .. முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ... கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா(60), என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி (45), பிருந்தா தேவி. (35), லட்சுமி. (24), செவ்வந்தி, (19), மற்றும் அம்பிகா, த/பெ.இராஜேந்திரன் (18), ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.