முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை மாவட்டம் செல்கிறார்!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக கோவை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25-ந்தேதி காலை 10 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்யவும் உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.