சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகை வழங்கிட முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில்‌ டெல்டா மாவட்ட விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களால்‌ 12-6-2023 அன்று மேட்டூர்‌ அணையில் இருந்து தண்ணீர்‌ திறந்து வைக்கப்பட்டது.

ஆனால்‌, காவிரி ஆற்றில்‌ கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர்‌ தொடர்ந்து பெறப்படாத காரணத்தால்‌,

மேட்டூர்‌ அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர்‌ திறந்து விட இயலாத நிலையில்‌, தற்போது டெல்டா மாவட்டங்களில்‌ ஏறத்தாழ 40 ஆயிரம்‌ ஏக்கர்‌ பரப்பில்‌ பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்கள்‌ வாடிய நிலையில்‌ பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து பயிர்‌ பாதிப்பு விவரங்கள்‌ முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500/- இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ இன்று (5-10-2023) உத்தரவிட்டு உள்ளார்கள்‌” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.