ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் அகாடமிகள்... ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் - வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

விளையாட்டுத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக ‘Tamil Nadu Champions Foundation’ என்கிற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகப் பேசிய முதலமைச்சர், சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.