விவசாயிகளுக்கு கஷ்டம் வந்தால் முதலமைச்சர் சும்மா இருக்க மாட்டார்- அமைச்சா் ஓ.எஸ். மணியன்

நாகை நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, நாகூர் பட்டினச்சேரி வெட்டாறு பகுதியில் ரூ.19 கோடி மதிப்பில் தடுப்பு கருங்கல் சுவர் அமைக்கும் பணி ஆகியவைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைெபற்றது. விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னா் அவா் நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு கஷ்டம் வந்தால் முதலமைச்சர் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். வேளாண் சட்டத்தால் கடுகளவு கூட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. புயலால் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வந்து வயலில் இறங்கி பார்வையிட்டு சென்றுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். தற்போது மழை ஓய்ந்துள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீரும் வடிய தொடங்கிவிட்டது. விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம்.

உரிய நிவாரணத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். அதனால் தான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆசைப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.