லடாக் மோதலில் 2 ராணுவ உயர் அதிகரிகள் இறந்ததாக சீன அறிவிப்பு

லடாக்கில் நடந்த மோதலில் 2 ராணுவ உயர் அதிகாரிகள் இறந்ததாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும் மொத்த உயிர் சேதம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ஒருவர் பழனி என்ற தமிழக ராணுவ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் சீன தரப்பில் 43வது ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் அமெரிக்க உளவுத்துறை 35 சீன வீரர்கள் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் சீன ராணுவம் அல்லது சீன அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வில்லை என்பதால் சீன தரப்பில் உயிரிழப்புக்கள் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் முதல் முறையாக தற்போது இந்தியா ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 2 சீன ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்ததாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மொத்த உயிரிழப்புகள் எவ்வளவு என்பது குறித்த தகவலை சீன ராணுவம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சீன ராணுவ உயர் அதிகாரிகள் இருவர் இறந்துள்ளதாக சீனா மற்றும் இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உயிரிழப்புக்கள் எவ்வளவு என்பதை சீன ராணுவம் வெளியிட வேண்டும் என அந்நாட்டு பத்திரிகைகள் கேள்வி எழுப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.