தண்ணீர் டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து; தூய்மை பணியாளர் பலி

தண்ணீர் டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் (வயது 58). இவர் பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை விஜயகுமார் வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை சாலை வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த தண்ணீர் டிராக்டர் ஒன்று விஜயகுமார் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை டிராக்டர் சிறிது தூரம் இழுத்து சென்றது.

இதில் விஜயகுமாரின் 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது. இதற்கிடையில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்ணீர் டிராக்டர் ஓட்டுனரான தனசேகர் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.