ஆந்திர முதல்வரின் நெருங்கிய உறவினர் இன்று கைது

ஆந்திரா: முதல்வரின் உறவினர் கைது... ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரும், எம்பி அவினாசி ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ்.பாஸ்கர் ரெட்டி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் அவரது சொந்த ஊரான கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்தலாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆதாயத்திற்காக தெலுங்கு தேசம் கட்சியினர் ஆள் வைத்து தங்கள் உறவினரை கொலை செய்துவிட்டனர் என்று ஜெகன்மோகன் ரெட்டி குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட முன்னாள் எம்பி விவேகானந்த ரெட்டியின் மகள், தனது தந்தை கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விவேகானந்த ரெட்டி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி சிலரைக் கைது செய்தது. அதன் ஒரு பகுதியாக கடப்பா மாவட்டத்திலுள்ள ஒ எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புலிவெந்தலாவிற்கு இன்று அதிகாலையில் சென்ற சிபிஐ அதிகாரிகள் கடப்ப பாராளுமன்ற உறுப்பினர் ஒய்.எஸ் அவிநாஷ் ரெட்டியின் தந்தை ஓய்.எஸ். பாஸ்கர் ரெட்டியை அதிரடியாக கைது செய்து ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த வழக்கில் அவினாஷ் ரெட்டியின் நெருங்கிய நண்பரான உதயகுமார் ரெட்டியை இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். உதயகுமார் ரெட்டி கைது தொடர்பாக கொலை நடந்த அன்று, உதயகுமார் ரெட்டி, சிவக்குமார் ரெட்டி, எம்பி அவினாசி ரெட்டி, அவரது தந்தை பாஸ்கர் ரெட்டி ஆகியோர் ஆதாரங்களை அழிக்க சதித்திட்டம் தீட்டியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.