கொத்து கொத்தாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மக்கள் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் கொரோனா வைரஸ் 51 லட்சத்து 3 ஆயிரத்து 6 பேருக்கு பாதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக பாதித்துள்ளது.

இதேபோன்று 24 மணி நேரத்தில் 5,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 401 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 224-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகிலேயே அதிகளவில் வட, தென் அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உள்ளது, 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, ஐரோப்பாவில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.