செப்டம்பர் 4-ந்தேதி முதல்-அமைச்சர் விழுப்புரம் வருகை

கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி வருகிற செப்டம்பர் 4-ந்தேதி விழுப்புரத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அவர் புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவுப்பகுதி, கலெக்டர் அலுவலக நுழைவுப்பகுதி மற்றும் அலுவலகத்தின் உள்பகுதியில் வர்ணம் பூசப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்- அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அறைகள் உள்ளிட்டவைகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.