முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி வருகை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக நேரில் சென்று கலெக்டர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புறப்பட்டார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நாளையும் (புதன்கிழமை) அவர் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காலை 10.25 மணிக்கு முதல்வர் சென்றடைகிறார். அங்கிருந்து நாகர்கோவிலில் உள்ள சர்க்யூட் ஹவுசுக்கு பகல் 12 மணிக்கு செல்கிறார்.

பின்னர் 2.30 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி கலெக்டர் அலுவலக ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் விவாதிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தொழில் முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்தாய்வு நடத்துகிறார். பின்னர் 5 மணியளவில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். நாகர்கோவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருகிறார்.