ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த இ.சி.ஆர். சாலையில் உள்ள புலிக்குகை கடற்கரைக்கு சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 13 பேர் ஒரு குழுவாக பொழுது போக்குவதற்காக நேற்று சென்றனர். இதில் மாணவர்கள் அனைவரும் புலிக்குகைக்கு பின்புறம் உள்ள கடலில் சந்தோஷமாக குளித்தனர்.

இந்நிலையில், அவர்கள் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலை வந்து சென்னை தனியார் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (வயது 19) , மற்றொரு மாணவர் நவீன் (20) ஆகியோரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அருகில் குளித்து கொண்டிருந்த சக மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய அவர்களை காப்பாற்ற கூச்சல் போடவே அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். நவீனை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

சந்தோஷ் ராட்சத அலையில் அலையில் சிக்கி மாயமானார். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சந்தோஷை மீனவர்கள் படகு மூலம் தேடி வருகின்றனர். இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.