மின்கம்பியில் நடந்து சென்று மரங்களை அகற்றிய ஊழியருக்கு பாராட்டு

மின்கம்பியில் உயிரை துச்சமாக மதித்து நடந்து சென்று மரங்களை அகற்றிய மின்வாரிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நிவர் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் அடித்த கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் பல பகுதியில் நான்கு நாட்களாக மின்சாரம் தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் கும்பகோணம் பந்தநல்லூர் பகுதியில் திருமாந்துறையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்தது . இதனால் மின் விநியோகம் தடைபட்டு நின்றது. இதனால் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மழை நீர் சூழ்ந்து வீடுகளில் மின்சாரம் இல்லாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அத்துடன் மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று சாய்ந்து கிடந்த படியால் அவற்றை வெட்ட முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் திணறினர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்து வந்த கதிராமங்கலம் மின்வாரிய அலுவலக கள உதவியாளர் உலகநாதன், தலைக்கவசம் அணிந்து உயர் அழுத்த மின் கம்பியில் 80 அடி தொலைவுக்கு நடந்து சென்றார்.

பின்னர் மின்கம்பிகளில் ஒட்டியிருந்த மூங்கில் மரங்களை அரை மணி நேரம் போராடி வெட்டி வீசினார். பின்னர் அவர் மீண்டும் கம்பியில் நடந்து வந்து கீழே இறங்கினார். பேரிடர் நேரத்தில் தக்க சமயத்தில் உதவி செய்த மின்வாரிய ஊழியரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.