நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள்; ரஜினிக்காக பதிவிட்ட கமல்

கமல்ஹாசனின் டுவிட்... நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பா் 14-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

தனி விமானம் மூலம், ஹைதராபாத் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். இதனிடையே படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. எனினும், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

தொடர்ந்து அவரது உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் இன்று திடீரென அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே ரஜினியின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்தின் உடல்நிலையினை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் சிகிச்சைக்காக இன்றும், நாளையும் அவர் மருத்துவமனையில் இருப்பார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஓய்வெடுக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் தனது டுவிட்டரில், நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.