தஞ்சை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் வங்கி ஊழியர் ஒருவரும், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் அடங்குவர்கள்.

நேற்று தொற்று உறுதியானவர்களில் கும்பகோணத்தை சேர்ந்த 8 பேர், தஞ்சையை சேர்ந்த 6 பேர், பட்டுக்கோட்டையை சேர்ந்த 3 பேர், திருவிடைமருதூரை சேர்ந்த 4 பேர், பாபநாசத்தை சேர்ந்த 2 பேர், பூதலூர், மதுக்கூரை சேர்ந்த தலா ஒருவர் ஆகியோர் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 465 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 353 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.