சென்னையிலிருந்து வந்த 30 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நகரைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் சிகிச்சைக்காக சென்ற அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் திருமங்கலம் நகர் கடந்த ஒரு மாதமாக தொற்று இல்லாத நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்த திருமங்கலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மூடப்பட்ட சாலைகள் திறந்து விடப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு ஏராளமானோர் வந்தனர். சென்னையிலிருந்து வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த 22 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 30 வயது பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.