மதுரையில் புதிதாக 151 பேருக்கு கொரோனா உறுதி; ஒரே நாளில் 5 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 109 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,515 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் நேற்று 97 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 70 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும் குணமடைந்தனர். இவர்களில் 66 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11,151 ஆக அதிகரித்துள்ளது. 1,056 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர். இவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 308 பேர் பலியாகி உள்ளனர்.