கொரோனா தடுப்புக்கு தேவையான நிதியை வழங்கவில்லை; மத்திய அரசு மீது முதல்வர் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்புக்கு தேவையான நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், குடிமராமத்து பணிகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முதல்வர் கேட்டறிந்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழகம் தேசிய அளவில் கொரோனா தடுப்பு பணியில் முதன்மை மாநிலமாக இருப்பதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதல்வர், ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாகவும், இதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.