நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை தொடக்கம்

இந்தியா: சீனாவில் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதேபோன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதேபோன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை தொடங்கியது. கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து அனுமதி அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார்.