திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா

ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்த ராணி என்பவருக்கு 88 வயதாகிறது. இவருக்கு மொத்தம் 6 மகன்கள் உள்ளனர். அதில் 5 பேர் ஜார்க்கண்டிலும், ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்டவர்கள் ஆவர். இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் ராணி மற்றும் அவரது 5 மகன்கள் அனைவரும் பங்கேற்றனர்.

அதன்பின் மீண்டும் தனது சொந்த ஊரான கட்ரசுக்கு ராணி திரும்பினார். ஒரிரு சில நாளிலேயே ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் போக்ரோவ் பகுதியில் உள்ள மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ராணிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே கடந்த ஜூலை 4 ஆம் தேதி மருத்துவமனையில் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின், உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது 5 மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர்.

உயிரிழந்த ராணிக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரையினால 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

ராணியின் 6 மகன்களில் டெல்லியில் வசித்து ஒரே ஒரு மகன் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார். கொரோனா காலத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று தாய் மற்றும் அவரது 5 மகன்கள் வைரஸ் தாக்குதலுக்கு 16 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.