மகாராஷ்டிராவில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த 18 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிரிம்பிஹான் கிராமத்தை சேர்ந்த போபட்ராவ் கலப்யூர், டைனேஸ்வர் கலப்யூர், திலீப்ராவ் கலப்யூர் ஆகிய சகோதரர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். மனைவி, மகன்கள், மகள்கள் என அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்தனர்.

இவர்களின் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 பேர் ஆகும். தற்போது இந்தியாவில் அசுரவேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இவர்களது குடும்பத்தையும் தாக்கியுள்ளது. கலப்யூரின் குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின் கொரோனா பரிசோதனையில் எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் 17 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக குடும்ப உறுப்பினர்கள் 18 பேரும் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சகோதரர்கள் மூவரும் ஜூலை 10, 15, 18 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சகோதரர்கள் மூன்று பேரின் மரணங்களும் ஜூலை 10 முதல் ஜூலை 18 வரையிலான 9 நாட்கள் இடைவெளியில் நடந்துள்ளது. இவர்களது மரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் இழப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.