சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,657 ஆக உயர்வு

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,657 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்த காரைக்குடியை சேர்ந்த 64 வயது ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்ந்துள்ளது.