தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,004 ஆக உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 3,643 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.