மதுரையில் இன்று கொரோனா பாதித்து 7 பேர் பலி

மதுரையில் இன்று 7 பேர் பலி... மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று (ஜூன் 27) 7 பேர் பலியாகினர். மூன்று நாளில் 25 பேர் இறந்துள்ளனர்.

மதுரையில் 650 படுக்கை வசதி கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று விதமான வார்டுகள் உள்ளன. தீவிரப் பாதிப்புள்ளோரை அனுமதிக்க ஐ.சி.யூ., வார்டு, அறிகுறியற்ற மிதமான பாதிப்புள்ளோரை கண்காணிக்க தனி வார்டு, கொரோனா அறிகுறியுடன் வரும் பிற நோயாளிகளை அனுமதித்து பரிசோதிக்க 'சாரி' (SARI) என்னும் வார்டு உள்ளது.

ஒரு வாரமாக இந்த சாரி வார்டில் தொடர் மரணங்கள் நிகழ்கின்றன. பரிசோதனை முடிவு வரும் முன்பே நோயாளிகள் இறப்பதால், 'கொரோனா சந்தேக மரணம்' என அழைக்கின்றனர். முதலில் தினமும் 4 பேர் இறந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 பேர் பலியாகினர். நேற்று 5 பேர், இன்று 7 பேர் இறந்துள்ளனர்.

இதில் கொரோனாவிற்கு இறந்தவர்களும் உள்ளனர். 20 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவு அறிவிக்கப்படவில்லை.