புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக 67,468 அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை கலீப்நகரில் ஏற்கனவே கொரோனா பாதித்தவரின் குடும்பத்தில் 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதேபோல அதே பகுதியை சேர்ந்த 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளது.

இதற்கிடையில் சென்னை மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை. கடியாபட்டியில் கொரோனா பாதித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், அரிமளம் ஒன்றியத்திற்கு சென்னையில் இருந்து வந்த 43 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் எகிப்து நாட்டில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் ஆலங்குடியில் மாணவியர் விடுதியில் தங்க வைத்திருந்தனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல சம்பட்டி விடுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.