வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,340 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,241 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,241 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,340 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.