தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 ஆக இருந்தது. இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மாப்பிளை உள்ளிட்ட சிலர் சென்னையில் இருந்து வந்து பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 8 பேருக்கும், தூத்துக்குடி நகரில் போல்டன்புரம், கணேஷ் நகர், லெவிஞ்சிபுரம் பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து வந்த தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரப் பகுதியில் மட்டும் புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய ஆய்வாளருக்கு 2 தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்ய்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.