அதிருது தமிழகம்... ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வெகு வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 4 ஆயிரத்து 58 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 485 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 33 பேர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.