தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா.ஆதித்தனார் - முதல்வர் எடப்பாடி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தது. அதன்படியே சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட பலர் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அவரது பிறந்த நாளான இன்று பல்வேறு தலைவர்கள் பல வாழ்த்து செய்திகளுடன் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். அதன்படி, தமிழக முதலமைச்சர் எடாப்பாடி பழனிசாமியும் சி.பா.ஆதித்தனாரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து எடாப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் மறைந்த சி.பா ஆதித்தனார் அவர்களின் 116-வது பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன் என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.