ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த தற்போதைய தகவல் வெளியாகியது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மதியம் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை மருத்துவர்களால் உன்னிப்பாக கண்காணிக்கபட்டு வருவதாகவும் அவரது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் அவர் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் எந்த ஒரு பார்வையாளரையும் சந்திக்க அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே ரஜினிகாந்தை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறும் அவரது குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ரஜினியின் நலம் விரும்பிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஜினியுடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மருத்துவர்களிடம் பேசி ரஜினிக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறும் கூறியதாகவும், ரஜினிகாந்த் விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.