ஸ்பெயினில் கொரோனா பரவலை குறைக்க அவசர நிலையை பிரகடனம்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, இந்தியா , பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நாட்டில் இதுவரை 11,10,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கொரோனா பாதிப்பினால் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, ஸ்பெயினில் கொரோனா பரவலை குறைக்க அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும். கனாரி தீவை தவிர இந்த அவசரநிலை மற்ற அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.

இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் கூறுகையில், இரவு நேரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். நாம் கடந்து வரும் நிலைமை தீவிரமானது என்றும், இந்த புதிய அவசரகால நிலை மே மாத தொடக்கம் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.