கொரோனா பரிசோதனை முடிவுகளில் தாமதம்; தொற்று உடைய பலர் வெளியில் சுற்றித்திரிவதால் அதிர்ச்சி

கொரோனா பரிசோதனை முடிவுகளில் தாமதம்... சிவகங்கை மாவட்டத்தில் 5 நாட்கள் கழித்து பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமாவதால் கொரோனா தொற்று உடைய பலர், வெளியில் சுற்றித்திரிகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் 300 முதல் 600 ரத்த மற்றும் சளி மாதிரிகளை சுகாதாரத்துறையினர் எடுக்கின்றனர்.

தவிர சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

இங்கு எடுக்கும் மாதிரிகளை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு ஒரே ஒரு இயந்திரம் மட்டுமே இருப்பதால் ஒரு நாளுக்கு 4 ஷிப்டுகள் மூலம் 160 முதல் 300 பரிசோதனை செய்யப்படுகின்றன.

இதனால் பரிசோதனை முடிவுகள் 3 முதல் 5 நாட்களுக்கு பிறகே கிடைக்கின்றன. முடிவுகள் வெளியாகும் வரை பரிசோதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தனிப்படுத்தி இருக்க சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் வெளியில சுற்றி திரிகின்றனர். மேலும் இதில் பலர் கரோனா தொற்று உடையவர் என முடிவுகள் வெளியாகும் போது தெரியவருகிறது. அதற்குள் அவர்கள் பலருக்கு பரப்பும் நிலை உள்ளது. சிலசமயங்களில் கரோனா பாதிப்பு தெரிவதற்கு முன்பே சிலருக்கு உடல்நிலை மோசமடைகிறது.

இதனால் மற்ற மாவட்டங்களை போன்று சிவகங்கை மாவட்டத்திற்கு கூடுதல் இயந்திரங்களை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி கூறுகையில், ஒரே ஒரு இயந்திரம் மட்டுமே இருப்பதால் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. கூடுதலாக ஒரு இயந்திரம் தருவதாகக் கூறியுள்ளனர். விரைவில் வந்துவிடும். மேலும் ரத்த, சளி மாதிரிகளை எடுத்தபிறகு உடலில் பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவமனைக்கு வந்துவிடலாம் என்று கூறினர்.