ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்


சென்னை: இன்று சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் சப்ளை செய்வதில் தாமதம் ... தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை அதிகரித்து தரக்கோரி, கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இப்போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்ந்தால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் பால் விற்க முன்வருவார்கள் எனவும், இதனால் ஆவின் நிறுவனம் நலிவடைய வாய்ப்பிருப்பதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஆவின் நிர்வாகம் தரப்பில் தட்டுப்பாடு எதுவும் இல்லை, இயந்திரக் கோளாறு காரணமாகவே பால் விநியோகம் தடைபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் சென்னை, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இன்று பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

பால் பண்ணையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய விநியோக வாகனங்கள் காலதாமதமாக சென்றதால் ஆவின் அட்டை தாரர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். சோழிங்கல்லூரில் ஆவின் பண்ணையில் பாலை பாக்கெட் செய்ய போதுமான இயந்திரங்கள் இல்லை என்பதால் , சென்னையில் பல இடங்களில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.