டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆதரவு தெரிவித்தாரா ?

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் ராஜ்நாத் சிங் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசியல் கட்சி பாரபட்சமின்றி ஆதரவு தெரிவிப்பதாகவும், விவசாயிகள் நிலைமையை புரிந்து கொள்ளாத பிரதமரை குற்றஞ்சாட்டி ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார். இந்த வீடியோ பாஜக கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறும் தலைப்பில் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது, அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேசிய போது எடுக்கப்பட்டதாகும். மத்தியில் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த வைரல் வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பதும், ராஜ்நாத் சிங் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.