திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் ஏன்? பாஜக தமிழக தலைவர் விமர்சனம்

நாகர்கோவில்: பாஜக தலைவர் விமர்சனம்... பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், முதலமைச்சர் அச்சமடைந்து தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தை அங்கு நடத்தியுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் என் மண் என் மக்கள் யாத்திரையின் இடையே பேசிய அண்ணாமலை, மீனவர்களுக்காக தி.மு.க. அரசு எவ்வித நலத்திட்டங்களை கொண்டு வரவில்லை என்றார்.

முன்னதாக, நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பார்வதிபுரத்திலிருந்து தனது நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர்.

இதனிடையே அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், மத்திய ஆட்சியில் பங்கு வகித்த போது மீனவர்களுக்காக எதையும் செய்யாத தி.மு.க.வின் நீலிக் கண்ணீரை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், முதலமைச்சரால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள், மீன்வளக் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு வசதி உள்ளிட்ட எந்த தேர்தல் வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.