நாகையில் இன்று மீண்டும் கைதானார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது... தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்துப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நேற்று பயணம் தொடங்கிய அவரை, கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக நாகப்பட்டினம் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

நேற்று மாலையில் கைது செய்யப்பட்ட அவர் சற்று நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த உதயநிதி, தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை இன்று நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து தொடங்கினார்.

அங்கு வீதியில் நடந்து சென்று மீனவ மக்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடினார். மீனவர் பிரதிநிதிகளிடமும் உரையாடிய உதயநிதி, அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் கே.என்.நேரு, மதிவாணன் உள்ளிட்டவர்களுடன் மீன்பிடிப் படகில் ஏறி, கடலுக்குள் சிறிது தூரம் சென்று வந்தார்.

கரை திரும்பிய அவர் மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க முற்பட்டபோது 200-க்கும் மேற்பட்ட போலீசார் அவரைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். அவருடன் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவாணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட திமுக முன்னணிப் பிரமுகர்கள் கைதாகினர்.