விநாயகர் சிலை வைக்கிறார்களா? போலீசார் தீவிர கண்காணிப்பு

பலத்த கண்காணிப்பு... கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்த இடங்களில் மீண்டும் விநாயகர் சிலை வைக்கும் செயல்களில் யாரும் ஈடுபடுகிறார்களா என்று போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,326 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்றன. இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி சிலை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலை தயாரிக்கும் இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சிறிய விநாயகர் சிலை மட்டும் செய்து வீடுகளில் வழிபடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படுகிறதா என்று போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கெனவே விநாயகர் சிலை வைத்த இடங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றால் உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தடையை மீறி சிலை வைத்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.