சபாநாயகர் குறித்து ட்வீட் செய்யக்கூடாது... ஓம்பிர்லா விடுத்த எச்சரிக்கை

புதுடில்லி: சபாநாயகர் குறித்து உறுப்பினர்கள் ட்வீட் செய்யக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.

டிவிட்டரில் எனக்கு எதிராக சில எம்.பி.க்கள் எழுதி வருகின்றனர். அப்படி எழுதக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.

மக்களவையில் நேற்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடர்பான விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மகுவா மொய்த்ரா எழுப்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா இவ்வாறு கூறினார்.

எந்த ஒரு எம்.பி.யின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் இவ்வாறு கூறினார். நேற்று கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது, “மக்களவையில் உறுப்பினர்களுக்கு பேச சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை என சில உறுப்பினர்கள் ட்விட்டரில் சில சமயங்களில் எழுதுகின்றனர். சபாநாயகர் குறித்து உறுப்பினர்கள் ட்வீட் செய்யக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்,” என்றார்.