இரட்டை இலை சின்னம் ... எடப்பாடி பழனிசாமி மனு நாளை விசாரணை

புதுடெல்லி: அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனை அடுத்து இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல்ஒன்று உருவாகியுள்ளது. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

ஆனாலும் 2 அணிகளும் தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த 2 வழக்குகளும் 30-ந் தேதி நாளை விசாரணைக்கு வருகிறது.