நம்மை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் மிகவும் அவசியம்; டாக்டர் ராதாகிருஷ்ணன்

வட மாநிலங்களில் தசரா பண்டிகைக்கு பிறகு அதிகளவு கொரோனா பரவியது. அதே போல் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 7 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு இருமல் வந்தால், 2 மீட்டர் தூரம் வரை நீர்த்துளிகள் பரவும் என்பது உண்மை. அதில் உள்ள நுண் வைரஸ் கிருமிகள் எதிரே இருப்பவர்களுக்கு உடனே பரவும் என்பதும் உண்மை.

இதில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், முகக் கவசம் அணிந்திருந்தால்தான் முடியும். எனவே பொதுமக்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது அடுத்தவர் முன்பு நிற்கும்போதும், நடந்து செல்லும் போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். அதுதான் உங்களை பாதுகாக்கும்.

தீபாவளி பண்டிகை என்பதால் பல பகுதிகளில் கூட்டம் அதிமாகவே உள்ளது. பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம். அதற்கு முகக்கவசம் கண்டிப்பாக தேவை. லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடங்களில் காற்றின் மூலம் பல கிருமிகள் வருவதுண்டு. எத்தனையோ நோய்கள் அதன் மூலம் வந்துவிடும்.

இப்போது தீபாவளி சமயம். பல இடங்களில் தீபாவளி பட்டாசுகளை வெடிக்கும் போது அதில் உள்ள ரசாயனக் கலவைகள் காற்றில் கலப்பது இயற்கை. இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதில் இருந்து தப்பிக்கவும் முகக்கவசம் தான் பயன்படுகிறது. எனவே எல்லா நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு இப்போது முகக்கவசம் மிகவும் அவசியம். அதை அணிந்து கொண்டால் பெரும்பாலான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.