சாயக்கழிவு கலக்கிறது நொய்யல் ஆற்றில்... நிறும் மாறுகிறது தண்ணீர்!!!

திருப்பூர் : திருப்பூர் ஜவுளித்துறைக்கு உட்பட்ட, சாய ஆலைகள், பிரிண்டிங் மற்றும் வாஷிங் நிறுவனங்கள், சாயக்கழிவு நீரை, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க, பல விதிமுறைகளுக்கு உட்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி பெறாமல் குடோன் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தி பட்டன், ஜிப் போன்றவற்றை சாயம் பூசி வருகின்றன.

சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர்நிலைகளில் விடப்படுகிறது. இதனால் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரால் ஆற்று நீர் நிறம் மாறி நுரை பொங்கியது. இதனால் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால், பாசனத்திற்கு பயன்படுத்தும் போது பயிர்கள் கருகி வருகின்றன.

இதனால் ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாயக்கழிவுகளை கலக்கும் சாய ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.