அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரிலேயே இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்தது என இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தின் போது அச்சமடைந்த மக்கள் திறந்த வெளிகளுக்கு ஓட்டம் பிடித்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.