இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... 162 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக தற்போது 162 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.