முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கடிதம்

முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவுக்கு, நன்றி தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று, முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவுக்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. 'ஊக்கத்தைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு இணங்கவும், 'லட்சியத்தில் உறுதி' என்ற குறிக்கோளுடனும், தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டில் அமைத்ததற்காக என்னைப் பாராட்டி தாங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன.

மூத்த அரசியல்வாதியும், எம்.ஜி.ஆரின் இதயத்தில் இருந்தவருமான, தாங்கள் என்னை பாராட்டி, வாழ்த்தியமைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவேண்டும் என இத்தருணத்தில் இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.