எடப்பாடி பழனிச்சாமி பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார்... அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

சென்னை: போக்குவரத்து பேருந்துகள் குறைக்கப்பட்டன என்று அ.தி.மு.க ஆட்சியின் தவறுகளையும், பொய்களையும் மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசு மீது சேற்றை வீசும் வகையில் தவறானது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்துப் போட்டது அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசப் பயணம் குறித்த கோப்பு. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இலவசப் பயணம் என்பதால் பெண்களை நடத்துநர்கள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துவருகின்றன. இந்தநிலையில், இலவசப் பயணத்தின் காரணமாக கிராமப் புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத்தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு புதிய பேருந்து கூட இந்த திமுக அரசு வாங்கவில்லை. இது இந்த திறமையற்ற அரசின் சாதனை. போக்குவரத்துத் துறை ஒரு சேவைத் துறை. தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக ஏதேனும் மறைமுக திட்டத்துடன் இந்த அரசு செயல்பட்டால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது.

எனவே, இந்த அரசு உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கவும், மாநகரப் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரித்து பெண்களின் பயணத்தை எளிதாக்கவும் வலியுறுத்துகிறேன். இந்த விவகாரம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்த அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு 4,300 புதிய பேருந்துகள் வாங்கப்படும். திமுக அரசின் பெயரையும் புகழையும் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அ.தி.மு.க ஆட்சியின் தவறுகளையும், பொய்களையும் மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பொய்யானது, அரசு மீது சேற்றை வீசும் வகையில் தவறானது.

போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் 2,000 வழித்தடங்கள் மூடப்பட்டன. கடந்த 5 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், ஒரு ஓட்டுனர், நடத்துனர் கூட பணியில் சேர்க்கப்படவில்லை,’ என்றார்.