எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகார்

சென்னை; கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

அதன் பின் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அவர் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இந்நிலையில் அவர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகிறார்.

இதனையடுத்து காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என புகழேந்தி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.