வரும் 26ம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்திக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி டெல்லியில் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி விவகாரத்தில் பெரும் காரசாரமாக கருத்து மோதல் நடைபெற்று வந்தது. அது அந்தக் கூட்டணிக்குள் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி டெல்லியில் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்ற வருடம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக நடத்திய பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதை அடுத்து அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரப்பட்டது. அதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் பழனிச்சாமியின் டெல்லி பயணம் அமைய உள்ளது. இந்த சந்திப்பின்போது கூட்டணி விஷயம் மட்டுமல்லாமல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் எடப்பாடி அமித் ஷாவிடம் எடுததுரைப்பார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.