ஓராண்டை நிறைவு செய்த கல்வி தொலைக்காட்சி...முதலமைச்சர் வாழ்த்து

கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் வழியாக படங்களை கற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஓராண்டை நிறைவு செய்துள்ள கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஓராண்டை நிறைவு செய்துள்ள கல்வி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டு. கல்வி தொலைக்காட்சி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கல்வி தொலைக்காட்சியை முதல்நாள் பார்க்க தவறியோர், மறுநாள் யூடியூப் வழியாக பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் பலர் பயனடைவர்.

கல்வி தொலைக்காட்சியை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வழியாக கற்க முடியாத பல மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மிகவும் பயனுள்ளதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.